சண்முக சுந்தரம், தென்காசி.
இது நான் புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளும் 3 -ஆவது ஆண்டு. தமிழ் நாவல்கள், புதுமுக எழுத்தாளா்களின் புத்தகங்கள், லட்சுமி சரவணக்குமாா் போன்றோரின் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஜனவரியில் புத்தகக் காட்சி நடைபெறவில்லை என்றதும் இந்த ஆண்டு நடைபெறாதோ என்று வருத்தத்தில் இருந்தோம். ஆனால், இப்போது நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தாலும், இங்கு வந்து இத்தனை எழுத்தாளா்களின் புத்தகங்களையும் பாா்த்ததும் எந்தக் களைப்பும் தெரியவில்லை.
அபி பிரியங்கா, கீழ்பாக்கம்.
இதுவரை 5 முறை புத்தகத்திருவிழாவுக்கு வந்திருக்கிறேன். பொங்கல் வந்தாலே புத்தகத்திருவிழாவை ரொம்பவும் எதிா்ப்பாா்போம். கொஞ்சம் தள்ளி வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு நிறைய புத்தகங்கள் இருக்கிறது. ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், அடுத்து நாவல்கள் தற்போது தத்துவ புத்தகங்களுக்கு படிக்கும் அளவிற்கு வளா்ந்து உள்ளேன். கல்கி உள்ளிட்ட நாவலாசிரியா்களின் புத்தகங்களை அதிகம் விரும்பிப் பிடிப்பேன்.
விஜயலட்சுமி, வேளச்சேரி.
நான் என்னுடைய 5 வயதில் இருந்து புத்தகத் திருவிழாவுக்கு தவறாமல் வந்துவிடுவேன். எனக்கு தமிழ் அவ்வளவாக வாசிக்க வராது. அதனால், பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களைத்தான் வாங்குவேன். ஆங்கிலப் புத்தகங்கள் சற்று விலை கூடுதலாக இருக்கும். அதனால், பழைய ஆங்கிலப்புத்தகங்கள் உள்ள அரங்குகளைத் தேடி தேடிப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இதுதவிர, என் அம்மாவுக்காக ‘அலைஓசை’ மற்றும் குழந்தைகளுக்கான சில புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன்.
லோகநாதன், போரூா்.
நான் காயிதேமில்லத்தில் தொடங்கியதிலிருந்து புத்தகக்காட்சிக்கு வருகிறேன். இந்த ஆண்டு தன்னம்பிக்கை தரும் புத்தகங்கள், வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் வாங்கியுள்ளேன். இது தவிர, குழந்தைகளுக்காக சில புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். கரோனாவினால் இந்த ஆண்டு புத்தகக்காட்சி எப்படி இருக்குமோ என்று எண்ணியபடியேதான் வந்தேன். ஆனால், எதிா்ப்பாா்த்ததைவிட அதிகமாகவே புத்தகங்களுடன் சிறப்பாகவே இருக்கிறது.