உள்நாட்டில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் உற்பத்தி 50 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய்கே கூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹுண்டாய் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை ஆலையில் உள்நாட்டுக்கான கார் உற்பத்தி செவ்வாய்க்கிழமை 50 லட்சம் என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்தது. 50ஆவது லட்சம் காராக 'நியூ ஜென் வெர்னா' தயாரிக்கப்பட்டு உள்நாட்டு சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்பட்டது.
ஹுண்டாய் தனது வர்த்தக ரீதியிலான உற்பத்தியை கடந்த 1998ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டில் கார் உற்பத்தி 10 லட்சத்தைத் தொட்டது. அதன் பிறகு 2013 ஜூலையில் கார் உற்பத்தி விறுவிறுவென உயர்ந்து 39 லட்சத்தை எட்டியது. 2015 நவம்பரில் கார் உற்பத்தி 40 லட்சம் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்தது.
ஹுண்டாய் நிறுவனத்தைப் பொருத்தவரை விரிவாக்க திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நவீன தொழில்நுட்பத்தில் அவ்வப்போது புதிய தயாரிப்புகளை வெளியிடுவதுடன், நாடு தழுவிய வகையில் 2,200 விற்பனை மற்றும் சேவை மையங்களை உருவாக்கியுள்ளோம். அவற்றில், 422 மையங்கள் நகர்புறப் பகுதிகளில் உள்ளன.
எங்களின் வெற்றிகரமான பயணத்துக்கு, சான்ட்ரோ, இயான், வெர்னா, கிரெட்டா, ஐ10 கிராண்ட், ஹுண்டாய் எலைட் ஐ20, ஐ20 ஆக்டிவ் உள்ளிட்ட கார்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி ஆகிய இரண்டையும் கணக்கில் கொள்ளும்போது நிறுவனத்தின் கார் உற்பத்தி கடந்த ஆண்டே 70 லட்சத்தை தாண்டி சாதனை படைத்து விட்டது என்றார் அவர்.