நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயக் கடன்களை வழங்க, இந்தியாவின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் வர்ததகம் மற்றும் மின்னணு வங்கியியல் பிரிவு நிர்வாக இயக்குநர் பி.கே. குப்தா தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
விவசாயக் கடன்களை வழங்குவதில் அதி நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.
இதுதொடர்பாக, பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து கடன் பட்டுவாடா பணிகளை சோதனை முறையில் மேற்கொண்டு வருகிறோம்.
புதிய முறையில், நிலம் குறித்த விவரங்களும் மின்னணு முறையில் சேகரிக்கப்படும்.
புதிய மின்னணு விவசாயக் கடன் முறையை பாரத ஸ்டேட் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தும்.
தற்போது, ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிதி நிறுவனங்கள் (ஃபின்-டெக்) மின்னணு முறையில் கடன்களை வழங்கி வருகின்றன. மாநில அரசுகளும் நில விவரங்களை சேகரித்து வைத்துள்ளன.
எனவே, இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயக் கடன்களை வழங்குவது, விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் என்றார் அவர்.