இந்திய பங்குச் சந்தைகள் மூன்று நாள் தொடர் ஏற்றத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் முறையாக சரிவைச் சந்தித்தது.
கச்சா எண்ணெய் விலை குறைவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு ஆகிய சாதகமான நிலவரங்களுக்கிடையிலும் பங்கு வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. இதற்கு, சர்வதேச பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சரிவு நிலையே முக்கிய காரணம்.
டாடா ஸ்டீல் பங்கின் விலை 3.21 சதவீதமும், வேதாந்தா 2.89 சதவீதமும், என்டிபிசி 2.42 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.09 சதவீதமும் சரிந்தன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ பங்குகளின் விலையும் 2.59 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 35,474 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 107 புள்ளிகள் குறைந்து 10,656 புள்ளிகளாக நிலைத்தது.