மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து 2-ஆவது நாளாக விறுவிப்புடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 159 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நிலைத்தன்மை அடைந்துள்ளது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, சில்லறைப் பணவீக்கம் குறைவு, பணப்புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்தனர்.
வரும் மார்ச் மாதத்துக்குள் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.42,000 கோடி அளவுக்கு மூலதனம் வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததன் எதிரொலியாக, வங்கி துறை பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. அதேபோன்று, தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளையும் முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கினர்.
இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, மாருதி, எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் பேங்க் மற்றும் கோட்டக் வங்கி பங்குகளின் விலை 2.53 சதவீதம் வரை அதிகரித்தது. அதேசமயம், சன் பார்மா, ஹீரோ மோட்டோகார்ப், யெஸ் வங்கி, விப்ரோ பங்குகளின் விலை 3.34 சதவீதம் வரை சரிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 159 புள்ளிகள் உயர்ந்து 35,513 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 57 புள்ளிகள்
அதிகரித்து 10,685 புள்ளிகளில் நிலைத்தது.