இந்தியாவில் முட்டை உற்பத்தி விரைவில் ஆண்டுக்கு 10,000 கோடி என்ற அளவை எட்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக முட்டை தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் பர்ஷ்ஹோட்டம் ரூபாலா கூறியதாவது:
இந்தியாவில் கோழிப் பண்ணைத் தொழில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு இத்துறையின் பங்களிப்பு இன்றியமையாதது. மேலும், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் துறையாகவும் இது உள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் இலக்கை அடைய கோழிப்பண்ணைத் துறையின் உதவி தவிர்க்க முடியாததாகும்.
தற்போதைய நிலையில், இத்துறையின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 9000 கோடியாக காணப்படும் முட்டை உற்பத்தி கூடிய விரைவில் 10,000 கோடியைத் தொடும் என்றார் அவர்.