கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஐஎல்&எஃப்எஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் வகையில் மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்க 3 ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடனில் சிக்கி தத்தளித்து வரும் நிறுவனத்தை மீட்கும் வகையிலான மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கவும், அதனை செயல்படுத்தவும் ஏதுவாக மூன்று ஆலோசகர்களை ஐஎல்&எஃப்எஸ் நிர்வாக குழு நியமித்துள்ளது.
அதன்படி, ஆர்ப்வுட் கேபிடல் மற்றும் ஜேஎம் பைனான்ஸியல் ஆகிய இரு நிறுவனங்கள் நிதி மற்றும் பரிவர்த்தனை ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அல்வரிஸ் அண்டு மார்சல் (ஏ&எம்) நிறுவனம் மறுசீரமைப்பு திட்டத்துக்கான வியூகங்களை வகுக்கும் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து ஐஎல்&எஃப்எஸ் நிறுவனத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைகளை புதிய நிர்வாக குழுவிடம் வழங்கும். ஆர்ப்வுட் கேபிடல் மற்றும் ஜேஎம் பைனான்ஸியல் ஆகிய இரு நிறுவனங்கள் நிறுவனத்தின் பங்கு விலக்கல் மற்றும் நிதி திரட்டுவது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மார்ச் நிலவரப்படி ஐஎல்&எஃப்எஸ் நிறுவனம், வங்கிகள் இதர கடன் நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகை ரூ.91,000 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்நிறுவனம் உடனடியாக ரூ.3,000 கோடி மூலதனத்தை பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும், ரூ.4,500 கோடிக்கு உரிமைப் பங்குகளை வெளியிடவும் ஐஎல்&எஃப்எஸ் திட்டமிட்டுள்ளது.