இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முதலீடு ஜூலை மாதத்தில் 36 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்தாண்டு ஜூலை மாதத்தில் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டில் உள்ள துணை நிறுவனங்களுடன் இணைந்து கூட்டுத் திட்டங்களில் 217 கோடி டாலரை முதலீடு செய்திருந்தது. கடன், பங்கு மூலதனம் மற்றும் உத்தரவாத கடிதங்கள் என்ற வகையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 207 கோடி டாலராக காணப்பட்ட இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு ஜூலை மாதத்தில் வெறும் 139 கோடி டாலராக குறைந்து போனது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 39 சதவீதம் குறைவாகும்.
இதில், பங்கு மூலதனமாக 60.82 கோடி டாலரும், கடனாக 40.67 கோடி டாலரும், உத்தரவாதத்தின் அடிப்படையில் 37.18 கோடி டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் உள்ள துணை நிறுவனத்தில் செரம் இன்ஸ்டிடியூட் அதிகபட்சமாக 18.74 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. இத்தாலியில் ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் 6.66 கோடி டாலரையும், பிரிட்டனில் இண்டர்குளோப் என்டர்பிரைசஸ் 5.46 கோடி டாலரையும், அமெரிக்காவில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 5.04 கோடி டாலரையும் முதலீடு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.