நடப்பாண்டின் ஜூன் காலாண்டில் இந்திய நிறுவனங்கள் அறிவித்துள்ள இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு கடந்தாண்டைக் காட்டிலும் 7 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து யர்னஸ்ட் & யங் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் இந்திய நிறுவனங்கள் அறிவித்த இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு 3,480 கோடி டாலராக இருந்தது. இது, காலாண்டுகளில் முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
கடந்த ஆண்டின் இதே கால அளவில் இணைத்தல்-கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு 510 கோடி டாலராக மட்டுமே காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது, தற்போது இவற்றின் மதிப்பு 7 மடங்கு அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
இணைத்தல்-கையகப்படுத்துதல் தொடர்பாக நடப்பாண்டின் ஜூன் காலாண்டில் மொத்தம் 273 ஒப்பந்தங்களை நிறுவனங்கள் செய்து கொண்டுள்ளன. இதில், ஃபிளிப்கார்ட் -வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தமே மிகப் பெரியதாக கருதப்படுகிறது.
ஏனெனில், மொத்த ஒப்பந்த மதிப்பில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதம் அளவுக்கு இருந்தது.
மேலும், நிதி சந்தையில் 110 டாலர் மதிப்புக்கு 39 இணைத்தல்-கையகப்படுத்துதல் ஒப்பந்தங்களும், நுகர்வோர் பொருள்கள் மற்றும் சில்லறைப் பிரிவில் 1,650 கோடி டாலர் மதிப்பிலான 30 ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவை தவிர, தொலைத் தொடர்பு (2 ஒப்பந்தம்: 54 கோடி டாலர்), பல்வேறுபட்ட தொழில்துறை பொருள்கள் (23 ஒப்பந்தம்: 290 கோடி டாலர்) மற்றும் உலோகம்-சுரங்கம் (6 ஒப்பந்தங்கள்:96 கோடி டாலர்) ஆகிய துறைகள் உள்ளதாக யர்னஸ்ட் & யங் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.