கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.6,800 கோடி விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை அதன் காரணமாக ஏற்படும் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றை மனதில் கொண்டு கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து லாபம் ஈட்டுவது கடினமான செயல் என்பதை கருதி அத்தகைய திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் அதிக அளவில் விலகி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதத்தில் கடன்சார் பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.7,000 கோடி வெளியேறிய நிலையில், ஆகஸ்ட் மாதத்திலும் கணிசமான தொகை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலீட்டாளர்கள் அம்மாதத்தில் ரூ.6,803 கோடியை திரும்பப் பெற்றுள்ளனர். நடப்பு நிதியாண்டின் 5 மாதங்களில் 4 மாதங்கள் நிகர அளவில் கணிசமான தொகை கடன்சார் திட்டங்களிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால அளவில் மட்டும் முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்ற தொகை ரூ.52,700 கோடியை எட்டியுள்ளது.
இதையடுத்து, தற்போதைய நிலையில் கடன்சார் பரஸ்பர நிதி திட்டங்களில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பு 10 சதவீதம் அளவுக்கே உள்ளது.
எஞ்சிய 90 சதவீதம் பங்கு சார்ந்த திட்டங்களிலேயே உள்ளது என இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.