மத்திய அரசு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஃப்ஐஇஓ-வின் தலைவர் கணேஷ் குப்தா கூறியதாவது: ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. ஏனெனில், அதனால் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படாமல் போகலாம்.
அதற்கு மாறாக இந்தப் பிரச்னைகளை ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமாக சரி செய்யலாம். இது, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்கு அதிக பயனளிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 2.5 சதவீதமாக இருப்பதற்கு நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. நம்மிடம் 10 மாதங்கள் இறக்குமதிக்கு போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ளது என்றார் அவர்.
ஏற்றுமதி: நாட்டின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 2,784 கோடி டாலரை எட்டியுள்ளது. மூன்று மாதங்களில் இல்லாத அளவில் ஏற்றுமதியில் அதி வேகம் ஆகஸ்டில் தென்பட்டுள்ளது. இதற்கு, பெட்ரோலியப் பொருள்கள், பொறியியல், மருந்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி கணிசமான உயர்வைக் கண்டதே முக்கிய காரணம். இதையடுத்து, அம்மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,740 கோடி டாலராக சுருங்கியுள்ளது.