நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகளால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
நிறுவனங்கள் வெளியிடவுள்ள நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு சந்தையில் மேலோங்கியுள்ளது.
அதேசமயம், நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டும் முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, பங்குச் வியாபாரத்தில் அதிக ஏற்ற இறக்க நிலை காணப்பட்டது.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக உறவில் காணப்பட்டு வரும் இழுபறி உள்ளிட்ட நிகழ்வுகளும் சர்வதேச அளவில் பங்கு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.
யெஸ் வங்கி பங்கின் விலை அதிகபட்சமாக 2.66 சதவீத சரிவைக் கண்டது.
இதையடுத்து, பஜாஜ் பைனான்ஸ், வேதாந்தா, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்பிஐ பங்குகளின் விலை 2.57 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிவடைந்து 38,700 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 61 புள்ளிகள் குறைந்து 11,604 புள்ளிகளில் நிலைபெற்றது.