இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இருந்தபோதிலும் நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
நிறுவனங்களின் நான்காம் காலாண்டு செயல்பாட்டிற்கான நிதி நிலை முடிவுகள் நன்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சந்தை வட்டாரத்தில் நிலவியது. மேலும், சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழலும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு வலு சேர்த்தது.
இதன் காரணமாக, வங்கி, மோட்டார் வாகனம், கட்டுமானம் மற்றும் உலோகத் துறை குறியீட்டெண்கள் 1.40 சதவீதம் வரை உயர்ந்தன. அதேசமயம், ஏஷியன் பெயின்ட்ஸ், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஓஎன்ஜிசி பங்குகளின் விலை 3.54 சதவீதம் வரை சரிவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 238 புள்ளிகள் உயர்ந்து 38,939 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 11,671 புள்ளிகளில் நிலைத்தது.