நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.8,126 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.6,904 கோடியுடன் ஒப்பிடும்போது இது 17.7 சதவீதம் அதிகம்.
வருவாய் ரூ.32,075 கோடியிலிருந்து 18.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.38,010 கோடியானது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19-ஆம் முழு நிதியாண்டில், நிகர லாபம் 21.9 சதவீதம் அதிகரித்து ரூ.31,472 கோடியாகவும், வருவாய் 19 சதவீதம் உயர்ந்து ரூ.1,46,463 கோடியாகவும் இருந்தது.
முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.18 இறுதி ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது என டிசிஎஸ் நிறுவனம், செபி-யிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நிதி நிலை முடிவு குறித்து டிசிஎஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் கூறியதாவது:
கடந்த 15 காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வலுவான நிலையை எட்டியது. அதேபோன்று நிறுவனத்தின் வர்த்தக ஒப்பந்தங்களின் மதிப்பும் முந்தை மூன்று காலாண்டுகளில் காணப்படாத அளவில் உயர்ந்துள்ளது. அடிப்படை பொருளாதார காரணிகளில் நிச்சயமற்ற தன்மை நிலவிய போதிலும், நிறுவனம் சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்துள்ளது புதிய நிதியாண்டின் வெற்றிப் பயணத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.