அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,378 கோடி டாலராக (ரூ.28.96 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 187 கோடி டாலர் அதிகரித்து 41,378 கோடி டாலராகியுள்ளது. இதற்கு, அந்நியச் செலாவணி சொத்துகளின் மதிப்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளதே முக்கிய காரணம்.
இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 523 கோடி டாலர் உயர்ந்து 41,191 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணக்கீட்டு வாரத்தில் 206 கோடி டாலர் அதிகரித்து 38,611 கோடி டாலரானது.
தங்கத்தின் கையிருப்பு மாற்றம் எதுவுமின்றி 2,322 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது. அதேசமயம், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 12 லட்சம் டாலர் குறைந்து 145 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 25 லட்சம் டாலர் சரிந்து 298 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2018- ஏப்ரல் 13 வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது முன்னெப்போதும் காணப்படாத உச்சபட்ச அளவாக 42,602 கோடி டாலரைத் தொட்டிருந்தது. ஆனால், சாதகமற்ற பொருளாதார சூழல்களால் செலாவணி கையிருப்பு அப்போதைய அளவிலிருந்து தற்போது 1,300 கோடி டாலர் அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.