நாட்டின் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 11 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு மார்ச் மாதத்தில், மருந்து, ரசாயனம் மற்றும் பொறியியல் துறையின் ஏற்றுமதி சூடுபிடித்துள்ளது. அதன் காரணமாக, நாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் வளர்ச்சி கண்டு 3,255 கோடி டாலரை (ரூ.2.28 லட்சம் கோடி) எட்டியுள்ளது. அதேசமயம் இறக்குமதி 1.44 சதவீதம் மட்டுமே உயர்ந்து 4,344 கோடி டாலராக (ரூ. 3.04 லட்சம் கோடி) இருந்தது. இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை மார்ச் மாதத்தில் 1,089 கோடி டாலராக குறைந்தது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இது 1,351 கோடி டாலராக அதிகரித்திருந்தது.
நடப்பாண்டு மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 31.22 சதவீதம் உயர்ந்து 327 கோடி டாலரைத் (ரூ.23,000 கோடி) தொட்டுள்ளது. அதேபோன்று, கச்சா எண்ணெய் இறக்குமதியும் 5.55 சதவீதம் அதிகரித்து 1,175 கோடி டாலரை (ரூ.82,000 கோடி) எட்டியுள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 முழு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 9 சதவீதம் வளர்ச்சியடைந்து 33,100 கோடி டாலரானது. இறக்குமதி 8.99 சதவீதம் உயர்ந்து 50,744 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இறக்குமதி கணிசமான அளவில் உயர்ந்ததையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 17,642 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, 2017-18 நிதியாண்டில் 16,200 கோடி டாலராக காணப்பட்டது என்று புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.