பொது பணவீக்கம் 3.18 சதவீதமாக அதிகரிப்பு

மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற மார்ச் மாதத்தில் 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பொது பணவீக்கம் 3.18 சதவீதமாக அதிகரிப்பு

மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற மார்ச் மாதத்தில் 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
 உணவு, எரிபொருள்களுக்கான விலை மிகவும் ஏற்றம் கண்டதையடுத்து சென்ற மார்ச் மாதத்தில் பணவீக்கம் 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் முறையே 2.93 சதவீதம், 2.76 சதவீதமாகவும், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 2.74 சதவீதமாகவும் காணப்பட்டது.
 காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதையடுத்து, அவற்றுக்கான பணவீக்கம் பிப்ரவரியில் 6.82 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 28.13 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆறுதல் அளிக்கும் விதமாக உருளைக்கிழங்கின் விலை மட்டும் 23.40 சதவீதத்திலிருந்து கணிசமாக குறைந்து 1.30 சதவீதமாகியுள்ளது.
 அதேபோன்று, பருப்பு மற்றும் கோதுமை வகைகளுக்கான பணவீக்கம் முறையே 10.63 சதவீதம் மற்றும் 10.13 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
 மார்ச் மாதத்தில் முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்ட புரதச்சத்து நிறைந்த பொருள்களின் விலை 5.86 சதவீதம் குறைந்திருந்தது. அதேபோன்று, வெங்காயத்தின் விலை 31.34 சதவீதமும், பழங்களின் விலை 7.62 சதவீதமும் குறைந்துள்ளது.
 அதேசமயம், எரிபொருள்களுக்கான பணவீக்கம் 2.23 சதவீதத்திலிருந்து 5.41 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 குறிப்பாக, டீசலின் விலை 3.72 சதவீதத்திலிருந்து அதிகரித்து 7.33 சதவீதமானது. பிப்ரவரியில் 2.93 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்த பெட்ரோலுக்கான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 1.78 சதவீதமாக இருந்தது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com