
விமான கட்டணம் உயர்ந்து வருவதற்கு, விமான நிறுவனங்களுடன் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று அமைப்பான டிஜிசிஏவின் மூத்த அதிகாரி இதுகுறித்து செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் சேவைகளை கடுமையாக குறைத்துக் கொண்டது, பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, விமான கட்டணம் கணிசமாக அதிகரித்து வருவது பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் டிஜிசிஏ ஆலோசனை நடத்தியது. இதில், விமானச் சேவை நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவும், கட்டணத்தைப் பொருத்தவரையில் முடிந்த அளவு குறைவான அளவில் நிர்ணயிக்கவும் டிஜிசிஏ வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்த உடனடி தகவல்களை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் சார்பில், விற்பனையிலிருந்து அதிக தொகுப்பு கட்டணங்களை நீக்குவதாகவும், குறைந்த தொகுப்பு கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
தினசரி அடிப்படையில் கட்டண விகிதங்களை டிஜிசிஏ தொடர்ந்து கண்காணிப்பதுடன், விமான நிறுவனங்களுடன் இணைந்து தேவையான நேரத்தில் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார் அவர்.
இதனிடையே, விமான கட்டண பிரச்னை, திறன் விரிவாக்கம் தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளை ஏப்ரல் 18-ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ளதாக டிஜிசிஏ செயலர் பிரதீப் சிங் கரோலா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...