நடுத்தர வகையைச் சேர்ந்த சொகுசு காரை இணைந்து மேம்படுத்தும் வகையில் மஹிந்திரா & மஹிந்திரா- ஃபோர்டு நிறுவனங்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா கூறியுள்ளதாவது:
ஃபோர்டு நிறுவனத்துடன் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மஹிந்திரா கூட்டு கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது இரு நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தம் எங்களது கூட்டுறவின் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமான அம்சமாகும். நடுத்தர வகை சொகுசு காரை (எஸ்யுவி) மேம்படுத்தும் பணியில், பல பிரிவுகளில் இணைந்து செயல்பட வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டு இந்த புதிய உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், தயாரிப்பு மேம்பாட்டு செலவினங்கள் வெகுவாக குறைவதுடன், பொருளாதார ரீதியில் இரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் உடன்படிக்கை இதுவாகும். இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், மஹிந்திரா-ஃபோர்டு இணைந்து மிக உயரிய உன்னதமான தயாரிப்பை இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளுக்கும் வழங்க முடியும் என்றார் அவர்.