டுவிட்டர் (சுட்டுரை) நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மேலாண்மை இயக்குநராக (எம்.டி.) மணீஷ் மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். டுவிட்டரில் இந்தியச் செயல்பாடுகளுக்கு அவர் தலைவராக இருப்பார்.
முன்னதாக இப்பொறுப்பில் இருந்த தரண்ஜீத் சிங் கடந்த ஆண்டு பதவியில் இருந்து விலக்கப்பட்டு வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டார். அப்போது இடைக்காலத் தலைவராக பாலாஜி கிருஷ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், புதிய தலைவராக மணீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு நெட்வொர்க் 18 டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக மணீஷ் பணியாற்றியுள்ளார். இது தவிர ஃபிளிப்கார்ட், டெக்ஸ்ட்வெப், மெக்கின்சே, பி அண்ட் ஜி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.
புதிய நியமனம் குறித்து சுட்டுரை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் எங்கள் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. எனவே, இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதலீடு அதிகரிக்கப்படுவதுடன், நிறுவனத்தின் கட்டமைப்பும் வலுப்படுத்தப்படும்.
இந்தியப் பிரிவுக்கு புதிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள மணீஷ், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக திறம்பட பணியாற்றுவார். தில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் எங்கள் அலுவலகங்கள் இப்போது இயங்கி வருகின்றன. இந்தியாவில் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முக்கிய தருணத்தில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.