பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (ஐ.ஓ.பி.) அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை மத்திய அரசு, ரூ.10,000 கோடியிலிருந்து, ரூ.15,000 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஐ.ஓ.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ரிசர்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையை அடுத்து மத்திய அரசு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.5,000 கோடி உயர்த்தியுள்ளது.
இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.15,000 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும், நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் பங்கு மூலதனத்தை அதிகபட்சம் ரூ.300 கோடி வரை அதிகரித்து கொள்ள வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உரிய நேரத்தில், உரிமை பங்கு வெளியீடு, பணியாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு, முன்னுரிமை பங்கு வெளியீடு மற்றும் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீடு ஆகியவற்றை மேற்கொண்டு இந்த தொகை திரட்டிக் கொள்ளப்படும் என அந்த செய்திக்குறிப்பில் ஐ.ஓ.பி. தெரிவித்துள்ளது.