தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.2,866 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.20,738 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.19,799 கோடியுடன் ஒப்பிடுகையில் 4.7 சதவீதம் அதிகமாகும். கடந்த 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபமாக ரூ.97 கோடியை ஈட்டியிருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இதேகாலகட்டத்தில் நிறுவனத்துக்கு ரூ.2,866 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் இந்தியாவின் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து பெறும் சராசரி வருவாய் முதல் காலாண்டில் ரூ.123லிருந்து ரூ.129-ஆக உயர்ந்துள்ளது என பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது.