நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,965 கோடி டாலராக (ரூ.29.64 லட்சம் கோடி) குறைந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு குறைந்து போனதையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 72 கோடி டாலர் (ரூ.5,016 கோடி) குறைந்து 42,965 கோடி டாலராகியுள்ளது.
இது இதற்கு முந்தைய ஜூலை 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 158 கோடி டாலர் உயர்ந்து 43,037 கோடி டாலராக இருந்தது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணியின் சொத்து மதிப்பு 173 கோடி டாலர் குறைந்து 39,935 கோடி டாலரானது.
அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 102 கோடி டாலர் உயர்ந்து 2,533 கோடி டாலரானது.
சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 28 லட்சம் டாலர் குறைந்து 144 கோடி டாலராகவும், கையிருப்பு நிலை 1.58 கோடி டாலர் சரிந்து 353 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி அதன் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.