இந்தியன் வங்கி நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.365.37 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச்செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வங்கியின் உலகளாவிய மொத்த வர்த்தம் 2019-20-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.4,25,793 கோடியை எட்டியுள்ளது. இது 2018-19-ஆம் ஆண்டில் முதல் காலாண்டின் மொத்த வர்த்தகத்துடன் ஒப்பிடும் போது, 14 சதவீதம் அதிகம். அதேபோல, உலகளாவிய வைப்புத் தொகையும் 15 சதவீதம் அதிகரித்து, ரூ.2,41,457 கோடியைத் தொட்டுள்ளது. மேலும், வங்கி வழங்கிய கடன் 12 சதவீதம் அதிகரித்து, ரூ.1,84,336 கோடியாகி உள்ளது. இது, 2018-19-ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் ரூ.1,64,381 கோடியாக இருந்தது.
சில்லறைக் கடன் 24 சதவீதமும் , விவசாயக்கடன் 25 சதவீதமும், சிறு குறுந்தொழில் கடன் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது.
2019-20-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தவருவாய் 14 சதவீதம் அதிகரித்து ரூ.5,832 கோடியாகி உள்ளது. நிகர லாபம் 74.55 சதவீதம் அதிகரித்து ரூ.365.37 கோடியைத் தொட்டது.
வாராக் கடனை குறைப்பதற்கு வங்கியின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.