நாட்டின் தங்கம் இறக்குமதி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 35.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 1,145 கோடி டாலர் (ரூ.80,000 கோடி) மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் இது 845 கோடி டாலராக (ரூ.50,000 கோடி) மட்டுமே காணப்பட்டது. ஆக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தங்கம் இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 35.5 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி வரவு மற்றும் செலவு ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை 2018-19-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீத அளவுக்கு (5,720 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2017-18 நிதியாண்டில் 1.8 சதவீதமாக (4,870 கோடி டாலர்) காணப்பட்டது.
தங்கம் இறக்குமதி அதிகரித்ததையடுத்து ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வர்த்தக பற்றாக்குறையானது 4,596 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4,494 கோடி டாலராக இருந்தது.
நடப்பாண்டு ஜனவரி மாதம் தொட்டே தங்கம் இறக்குமதியானது இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டு வருகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும் அதன் இறக்குமதி 11 சதவீதம் அளவுக்கு குறைந்து காணப்பட்டது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் தங்கம் இறக்குமதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆபரண தேவை உள்ளிட்டவற்றுக்காக ஆண்டுக்கு 800-900 டன் தங்கத்தை நம்நாடு இறக்குமதி செய்கிறது.
அதிகப்படியான தங்கம் இறக்குமதி நாட்டின் வர்த்தக மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே இதன் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்துவதாக பட்ஜெட்டில் அறிவித்தது.