சில்லறைப் பணவீக்கம் சென்ற ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
உணவுப் பொருள்களின் விலை அதிகரித்து காணப்பட்ட போதிலும், கடந்த ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.15 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் 3.18 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலையில் 4.17 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டன.
சென்ற ஜூன் மாதத்தில் 2.25 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூலையில் 2.36 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் சிஎஸ்ஓ தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தை 4 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கியை அறிவுறுத்தியுள்ளது. தற்போது சில்லறைப் பணவீக்கம் அந்த அளவிற்கு கீழ்தான்உள்ளது.
ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் நிதி கொள்கை அறிவிப்பில் சில்லறைப் பணவீக்கத்தை முக்கிய காரணியாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற வகையில் முடிவெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.