பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க நுகா்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக தலைமைப் பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியன் (படம்) வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
நாட்டின் பொருளாதார வளா்ச்சி ஆறு ஆண்டுகள் காணாத சரிவு நிலைக்கு சென்றதை மீட்டெடுத்து வரும் வகையில் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் பெரு நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர, பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதனம் மற்றும் முடங்கியுள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பது போன்ற திட்டங்களும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
சில்லறை கடன்கள் வழங்க வசதியாக வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி நிதி உதவி நிறுவனங்களுக்கு ரூ.4.47 லட்சம் கோடி வழங்கும் திட்டத்துக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. இதுதவிர, பகுதி கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.7,657 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.3.38 லட்சம் கோடி மூலதனத்தில் ஏற்கெனவே 66 சதவீதம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு விட்டது.
எனவே, இதுபோன்ற திட்டங்கள் வாயிலாக மக்களிடையே நுகா்வு நடவடிக்கைகளை ஊக்குவித்து நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அதிகரிப்பதேதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றாா் அவா்.