முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (டிஐஐ) மூன்றாம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் 121 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் ரூ.1,163 கோடியிலிருந்து 15 சதவீதம் அதிகரித்து ரூ.1,341 கோடியாக இருந்தது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.35 கோடியிலிருந்து 121 சதவீதம் உயர்ந்து ரூ.77 கோடியை எட்டியது. டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு ரூ.41 கோடி என்ற அளவில் காணப்பட்டது. நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.1.75 வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது என டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.