நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான கால அளவில் நிகர அளவிலான நேரடி வரி வசூல் ரூ.7.89 லட்சம் கோடியாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்ததாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான முதல் 10 மாத காலத்தில் நேரடி வரிகள் மூலம் ஈட்டிய வசூல் ரூ.7,88,930 கோடியாக இருந்தது.
2016-17 வரி மதிப்பீட்டு ஆண்டின் கணக்கீட்டின்படி நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 9.92 கோடியாக உள்ளது.
2017-18-ஆம் ஆண்டில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.10.02 லட்சம் கோடியாக காணப்பட்டது.
மத்திய அரசின் திருத்திய மதிப்பீட்டில், நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூலானது ரூ.12 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-18-இல், நேரடி வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.98 சதவீதம் என்ற அளவில் இருந்தது என சுக்லா தெரிவித்தார்.