செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்கும் உணவை அவர்களது வீடு அல்லது இருப்பிடங்களுக்கு சென்று வழங்கி வரும் நிறுவனங்களில் ஸ்விகி முன்னணியில் இருப்பதாகும். தற்போது காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு நேரில் விற்பனை செய்யும் புதிய சேவையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக ஸ்விகி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உணவுகளை மட்டுமே இதுவரையிலும் வழங்கி வந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட பொருள்களை வழங்கும் வகையில் ஸ்விகி ஸ்டோர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நகரங்களில் உள்ள அனைத்து கடைகளிலும் பொருள்களை வாங்க முடியும் என்பதால், அனைத்து பொருள்களையும் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் ஒற்றைச் செயலியாக ஸ்விகி மாறும்.
பழைய, புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வணிகர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதாகவும் ஸ்விகி ஸ்டோர்ஸ் இருக்கும்.
டெலிவரி பிரிவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கூடுதல் வருவாயை ஈட்டித் தருவதாகவும் ஸ்விகி ஸ்டோர்ஸ் அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விகி நிறுவனத்தின் முதன்மைச் செயலர் ஸ்ரீஹர்ஷா மஜதே வெளியிட்ட அறிக்கையில், இன்றைக்கு எங்களது நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உணவு விற்பனை என்பதைத் தாண்டி பலதரப்பட்ட பொருள்களை மக்களுக்கு வழங்குவதாக அமையும். வாடிக்கையாளர்களுக்கு தேவையான அன்றாட பொருள்களை வழங்குவதில் அதே தரத்தையும், அனுபவத்தையும் நாங்கள் வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.