ரெப்கோ ஹோம் பைனான்ஸ் டிசம்பர் காலாண்டில் ரூ.55.6 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.805.2 கோடி மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கியது. வழங்கப்பட்ட கடன் 12 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.733.2 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் 8 சதவீதம் உயர்ந்து ரூ.115.2 கோடியாகவும், நிகர லாபம் 31 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.55.6 கோடியாகவும் இருந்தது.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 9 மாத கால அளவில் அனுமதி அளிக்கப்பட்ட கடன் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2,397.2 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன் 13 சதவீதம் உயர்ந்து ரூ.2,213.7 கோடியாகவும் இருந்தது. நிகர வட்டி வருவாய் 4 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.341 கோடியாகவும், நிகர லாபம் 9 சதவீதம் அதிகரித்து ரூ.183.1 கோடியாகவும் இருந்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் நடவடிக்கைகள் 12.4 சதவீதம் அதிகரித்து ரூ.10,668 கோடியை எட்டியது. இதில், தனிநபர் கடன் 13. 2 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. சுய வேலைவாய்ப்பு கடன் 55.1 சதவீத பங்களிப்பையும், சொத்து அடமான கடன் 18.4 சதவீத பங்களிப்பையும் வழங்கி வருவதாக ரெப்கோ ஹோம் பைனான்ஸ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.