நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.8,105 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் கோபிநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
2018-ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்துக்கு சிறப்பாக இருந்தது. டிசம்பர் காலாண்டில் நிறுவனம் 20.8 சதவீத வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நிலையான பண மதிப்பு அடிப்படையில் இதன் வளர்ச்சி 12.1 சதவீதமாக இருந்தது. 14 காலாண்டுகளில் இதுவே அதிகபட்ச வளர்ச்சியாகும். அனைத்து நாடுகளுக்குமான நிறுவனத்தின் அனைத்து பிரிவிலான வர்த்தகம் ஏற்றமிகு வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் சேவைகள் பிரிவில் நிறுவனத்துக்கு அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. மொத்த வருவாயில் டிஜிட்டல் பிரிவிலான வர்த்தகம் மட்டும் 30.1 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆண்டுக்கு இது 52.7 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ.37,338 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.30,904 கோடியாக காணப்பட்டது.
நிகர லாபமானது ரூ.6,531 கோடியிலிருந்து 24.1 சதவீதம் உயர்ந்து ரூ.8,105 கோடியாகியுள்ளது.
அக்.,-டிச., காலாண்டில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தோரின் எண்ணிக்கை 6,827 (நிகர அளவில்). இதையடுத்து, டிசிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 4,17,929-ஆகியுள்ளது என்றார் அவர்.
மூன்றாவது இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.4 வழங்குவதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.