இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாமிடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.3,610 கோடியாக குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.21,400 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.17,794 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 20.3 சதவீதம் அதிகம். அதேசமயம், நிகர லாபம் ரூ.8,260 கோடியிலிருந்து 30 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.3,610 கோடியாகியுள்ளது.
நிகர லாபம் சரிவடைந்துள்ள நிலையிலும், நிறுவனம் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி பங்கின் விலை ஒன்று ரூ.800-க்கு மிகாமல் வெளிச் சந்தையிலிருந்து ரூ.8,260 கோடி மதிப்பிலான பங்குகள் திரும்பப் பெறப்படும். இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4 சிறப்பு ஈவுத் தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒட்டுமொத்த செலவு ரூ.2,107 கோடியாக இருக்கும்.
2018-19 நிதியாண்டில் நிலையான கரன்ஸி மதிப்பு அடிப்படையில் நிறுவனத்தின் வருவாய் 8.5-9 சதவீதமாக இருக்கும் என உயர்த்தி மதிப்பிடப்பட்டுள்ளது என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.