ஏர் இந்தியாவின் பயணிகள் வருவாய் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியாவின் உயரதிகாரி தெரிவித்ததாவது:
விமானங்களை திறமையான முறையில் கையாண்டதன் விளைவாக நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பயணிகள் மூலம் ரூ.5,538 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.4,615 கோடியாக மட்டுமே காணப்பட்டது. சிறப்பான செயல்பாடுகள் மூலம் ஏர் இந்தியாவின் பயணிகள் வருவாய் மூன்றாவது காலாண்டில் 20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
அதேபோன்று இக்காலண்டில் பயணிகள் எண்ணிக்கையும் வெகுச் சிறப்பாக அதிகரித்துள்ளது. அதன்படி 2017-18 மூன்றாவது காலாண்டில் 53.28 லட்சமாக காணப்பட்ட பயணிகள் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்து நடப்பாண்டில் 55.27 லட்சமாக உயர்ந்துள்ளது.
மூன்றாவது காலாண்டில் மொத்தம் 15 புதிய விமானங்கள் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது என்றார் அவர்.