சாதகமற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 156 புள்ளிகள் குறைந்தது.
மத்திய அரசு வெளியிட்ட இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் சந்தைகளின் ஏற்றத்துக்கு சாதகமாக அமையவில்லை. தொழில்துறையில் காணப்பட்ட மந்தநிலை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி உள்நாட்டு முதலீட்டாளர்களையும் உற்சாகம் இழக்க செய்தது. முதலீட்டாளர்கள் பலர் லாப நோக்குடன் செயல்பட்டு பங்குகளை விற்பனை செய்தனர். இதன் காரணமாக, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது.
திங்கள்கிழமை வர்த்தகத்தில், எல் அண்டு டி, இன்டஸ்இண்ட் வங்கி, பவர்கிரிட், டிசிஎஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், பார்த்தி ஏர்டெல், எஸ்பிஐ பங்குகளின் விலை 2.64 சதவீதம் வரை சரிந்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து யெஸ் வங்கி பங்கின் விலை 6.22 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. இதைத் தவிர, இன்ஃபோசிஸ் பங்கின் விலை 2.58 சதவீதம் உயர்ந்தது.
சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் பங்குகளின் விலையும் 1.68 சதவீதம் வரை உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிந்து 35,853 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 57 புள்ளிகள் குறைந்து 10,737 புள்ளிகளில் நிலைபெற்றது.