நடப்பு நிதியாண்டில் இந்திய தோல் தொழில் துறை 5-6 சதவீதம் வளர்ச்சி காணும் என தோல் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவர் அக்கீல் அகமது வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்திய தோல் பொருட்கள் துறையின் விற்றுமுதல் 1,774 கோடி டாலராக உள்ளது. இதில் ஏற்றுமதியின் பங்களிப்பு 574 கோடி டாலராகவும், உள்நாட்டு வர்த்தகத்தின் மதிப்பு 1,200 கோடி டாலராகவும் உள்ளன.
காலணிகளைப் பொருத்தவரையில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. எனவே, தோல் தொழில் வர்த்தகத்துக்கான எதிர்காலம் சிறப்பாக உள்ளது.
அதன் ஒரு பகுதியாக நடப்பு நிதியாண்டில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் இத்துறை 5-6 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் இத்துறையின் வளர்ச்சியானது மேலும் பல புதிய உச்சங்களை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் உள்ளன.
தோல் தொழில் துறையைப் பொருத்தவரையில் இந்தியாவுக்கு அமெரிக்கா மிகப் பெரிய சந்தையாக திகழ்கிறது. அந்த சந்தையில் உள்ள வாய்ப்புகளை நாம் தக்க வைக்க வேண்டுமெனில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நாம் உற்பத்தி திறனை அதிகரிப்பது மிகவும் அவசியம் என்றார் அவர்.