தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.5,586 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹெச்டிஎஃப்சி வங்கி வருவாய் நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் ரூ.30,811.27 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.24,450.44 கோடியாக காணப்பட்டது.
நிகர வட்டி வருவாய் ரூ.10,314.3 கோடியிலிருந்து 21.9 சதவீதம் அதிகரித்து ரூ.12,576.8 கோடியானது.
நிகர வட்டி வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்ததன் காரணமாக வங்கியின் நிகர லாபம் ரூ.4,642.6 கோடியிலிருந்து 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.5,585.9 கோடியை எட்டியுள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், மொத்த வாராக் கடன் விகிதம் 1.29 சதவீதத்திலிருந்து உயர்ந்து 1.38 சதவீதமாகியுள்ளது. அதே
சமயம், நிகர வாராக் கடன் விகிதம் 0.44 சதவீதத்திலிருந்து குறைந்து 0.42 சதவீதமாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.69,912 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.85,393.5 கோடியாகியுள்ளது. நிகர லாபம் ரூ.12,687.47 கோடியிலிருந்து 19.7 சதவீதம் உயர்ந்து ரூ.15,193 கோடியைத் தொட்டுள்ளது.
டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.9,49,079 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.11,68,556 கோடியாகியுள்ளது.
மொத்த டெபாசிட் 22 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.8,52,502 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன்கள் 24 சதவீதம் அதிகரித்து ரூ.7,80,951 கோடியாகவும் இருந்தது என ஹெச்டிஎஃப்சி வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.