
வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் வேளாண் ஏற்றுமதியை 6,000 கோடி டாலராக (ரூ.4.20 லட்சம் கோடி) அதிகரிப்பதே மத்திய அரசின் இலக்கு. இந்த இருமடங்கு வளர்ச்சியை அடைய தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்தில் (என்சிடிசி) சிஎஸ்இபிஎஃப் எனும் கூட்டுறவு துறை ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச ஏற்றுமதி பகுதிகளில் இயங்கும். இது, ஏற்றுமதி தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்து ஊக்குவிக்க உதவும்.
இந்தியாவைப் பொருத்தவரையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. இதில், இந்தியாவில் உள்ள 15 கோடி விவசாயிகளில் 94 சதவீத விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
கூட்டுறவு மூலமாக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு முதல் சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 13-ஆம் தேதி இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது என்றார் அவர்.