பொருளாதார ஆய்வறிக்கையின் மூலம் அரசு தெரிவிக்கும் விஷயங்கள் எதிர்மறையாக தெரிகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நாளை (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்கிறார்.
பல்வேறு துறைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையானது, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 2018-19 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
இந்த ஆய்வறிக்கை குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
"பொருளாதார ஆய்வறிக்கையின் மூலம் அரசு தெரிவிக்கும் விஷயங்கள் எதிர்மறையாக தெரிகிறது. 2019-20 நிதியாண்டு குறித்த பொதுவான பொருளாதார பார்வை குறித்து இரண்டாவது தொகுப்பின் முதல் பாகத்தில் இருக்கிறது. ஆனால், துறை வாரியான கணிப்புகள் ஏதும் இல்லாமல் 2019-20 இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வெற்று அறிக்கையாகவே இருக்கிறது.
இதற்கு ஓரளவிலான விளக்கங்கள் இரண்டாவது தொகுப்பின் இரண்டாவது பாகத்தில் உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள், 1. மந்தமான வளர்ச்சி, 2. வருவாய் பற்றாக்குறை, 3. நிதி பற்றாக்குறை இலக்கில் சமரசம் செய்துகொள்ளாமல் வளங்களை கண்டறிவது, 4. எண்ணெய் விலை தாக்கங்கள் மற்றும் 5. 15-வது நிதி ஆணைய பரிந்துரைகள். இதில் எதுவுமே நேர்மறையாகவும், ஊக்குவிக்கும் வகையிலும் இல்லை என்பது அச்சமூட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.