சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு உதவுமா மத்திய பட்ஜெட்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கோவை மாவட்டத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பரவலான கருத்து வெளியாகியிருந்தது.
சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு உதவுமா மத்திய பட்ஜெட்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கோவை மாவட்டத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பரவலான கருத்து வெளியாகியிருந்தது.
 இருப்பினும் சிறு, குறு, மத்திய தொழில் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் வெளிவந்துள்ள அறிவிப்புகள் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்குள் அதன் பலனை கோவை அறுவடை செய்யும் என தொழில் அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 மத்திய ஜவுளித் துறை விரைவில் பஞ்சாலைகளை ஆய்வு செய்து உரிய மானியங்களை குறுகிய காலத்தில் வழங்கி நிதிச்சுமையில் தவிக்கும் ஜவுளித் துறையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது.
 பட்ஜெட் குறித்து கோவையைச் சேர்ந்த முக்கியத் தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ள கருத்துகள்:
 கோவை கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி: சிறு, குறு, மத்திய தொழில்களின் முதற்படியே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான். அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட்டில், வட்டியில்லா கடன் திட்டம் மூலமாக புதிய மற்றும் கூடுதலாக கடனுதவி பெறும் அனைத்து ஜிஎஸ்டி பதிவுபெற்ற சிறு, குறு, மத்திய தொழிற்சாலைகளுக்கு 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன.
 இது பல இளைய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும். ஒன்றரைக் கோடி ரூபாய்க்குள் வர்த்தகம் செய்யும் சில்லறை வணிகர்களுக்கு ஓய்வூதிய வசதி அறிவிக்கப்பட்டிருப்பது புதிய முயற்சியாக உள்ளது. புதிய தொழில்கள் தொடங்குவதற்கான விதிமுறைகள் எளிதாக்கப்பட்டிருப்பதன் மூலம் தொழிலமுனைவோர் பயனடைவர். மேலும், 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, அதை சிறப்பான முறையில் செயல்படுத்தினால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவர்.
 இந்திய ரயில்வே துறை சிறப்பாகச் செயல்பட 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. ரயில்வே துறையின் வளர்ச்சிக்கான தேவைகளை அரசு மட்டுமே சுமக்க இயலாது. இதைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வேயின் புதிய அத்தியாயமாக அரசு-தனியார் இணைந்து கூட்டாகச் செயல்படும் திட்டம் வரவேற்கத்தக்கது. இதன்மூலம் சிறு, குறு நகரங்களுக்கும் பயணிகள் ரயில் சேவையை நீட்டிக்கவும், கோவை போன்ற வளர்ந்து வரும் பெரு நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்டவற்றை எளிதில் அமல்படுத்தவும் முடியும்.
 ஜாப் ஆர்டர் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
 தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ப.நடராஜ்:
 ஒரு தேசம், ஒரு மின்வழிப்பாதை என்ற தொலை நோக்குத் திட்டம் பாராட்டுதலுக்குரியது. உலக ஜவுளி சந்தையில் போட்டியிட அபரிமிதமான மின் செலவு ஒரு முக்கிய காரணியாக உள்ளதால் மேற்கண்ட திட்டம் நடைமுறைக்கு வரும்போது, இந்திய ஜவுளித் துறையின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். இதேபோல இலவசம் மற்றும் சலுகை மின்சாரத்தினால், தொழிற்சாலைகளின் மீது திணிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை அகற்றுவது, பொது சந்தையில் வாங்கும் மின்சாரம், சொந்த தேவைக்கு தயாரிக்கும் மின்சாரம் போன்றவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள், கூடுதல் கட்டணங்களை நீக்குவது போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
 ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கியுள்ளது மிகவும் குறைவு. ஏற்கெனவே பல்வேறு ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டங்களின் கீழ் நிலுவைத் தொகை ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. மத்திய ஜவுளித்துறை விரைவில் பஞ்சாலைகளை ஆய்வு செய்து உரிய மானியங்களை குறுகிய காலத்தில் வழங்கி நிதிச் சுமையில் தவிக்கும் ஜவுளித் துறையை மீட்க வேண்டும்.
 கோவை சிட்கோ உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் (கொசிமா) தலைவர் எஸ்.சுருளிவேல்:
 சிறு, குறு தொழில்களை பலப்படுத்த வட்டியில் 2 சதவீத சலுகை அளிப்பதற்காக ரூ.350 கோடி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியிருக்கலாம். ரூ. 400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு ஏமாற்றமளிக்கிறது. இதை 20 சதவீதமாக குறைத்திருக்க வேண்டும். பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மேலும் 100 தொழில் தொகுப்பு மையங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு கிராமத் தொழில்களை உருவாக்கும். புதிய தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வரி கண்காணிப்பில் விலக்கு அளிக்க வேண்டும்.
 தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் (சீமா) தலைவர் வா.கிருஷ்ணகுமார்:
 பாரத் மாலா, சாகர் மாலா, உதான் திட்டங்கள் கிராமப்புற மற்றும் நகரங்களை இணைக்கிறது. இது நமது நாட்டின் சாலை வசதிகளை மேம்படுத்தும். இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தவும், தனியார் பங்களிப்புடன் நாட்டின் புறநகரங்களை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளவும், 2030-ஆம் ஆண்டு வரை ரூ.50 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தனியாருடன் இணைந்து அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. பெட்ரோல் விலை குறைப்பு, ஜாப் ஆர்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரி சதவீதத்தை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
 தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்டத் தலைவர் ஜேம்ஸ்:
 இந்த பட்ஜெட் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் வசூலிக்கும் ஜிஎஸ்டி தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்த வழங்கிய கால அவகாசத்தைத் தவிர வேறு எந்தப் புதிய அறிவிப்பும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு, வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு, இதேபோல சிறு, குறு தொழிலுக்கான தொழிற்பேட்டை குறித்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்காத பட்ஜெட்டாக உள்ளது.
 இந்திய தொழில் கூட்டமைப்பின்(சிஐஐ) ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்:
 இந்த பட்ஜெட் நாட் டின் வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையோடு தயார் செய்யப்பட்ட பட்ஜெட். விவசாயம், எம்எஸ்எம்இ, ஸ்டார்ட் அப், டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு துறைகளின் முன்னேற்றத்துக்கான திட்டங்களால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். அரசு பொதுத் துறை வங்கிகளில் ரூ. 70 ஆயிரம் கோடி மூலதனமாக முதலீடு செய்ய அறிவித்திருப்பது வங்கிகள் கொடுக்கும் கடன் தொகையை அதிகரிக்க உதவும். ஆனால் வங்கி அதிகாரிகளுக்கு கடன் கொடுப்பதில் இருக்கும் தயக்கத்தையும் அச்சத்தையும் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்:
 ஒரே நாடு- ஒரே மின்வழிப் பாதை, 75 ஆயிரம் நபர்களைத் தேர்வு செய்து தொழில் முனைவோராக மாற்றுவது, மத்திய அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிக்கப்பட்ட தொழில் நகரமான கோவைக்கு புதிய ரயில்களோ, ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டங்களோ அறிவிக்கப்படாதது கோவையைப் புறக்கணிக்கும் செயல்.
 கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் எஸ்.ரவிகுமார்:
 தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மொத்தத்தில் சில அம்சங்கள் வரவேற்கக் கூடியதாக இருந்தாலும் இது குறுந்தொழில் முனைவோருக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.
 இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்:
 பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்களைக் கண்டறிந்து, செயல்படுத்தும் வகையில் அரசும், தனியாரும் இணைந்து ஒரு சிறப்புக் குழுவை அமைப்பது என்ற திட்டம் வரவேற்புக்குரியது. தற்போது வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு 26 சதவீதமாக உள்ளது. ஒப்பீட்டளவில், வியத்நாமில் 73 சதவீதமும், சீனாவில் 62 சதவீதமும் உள்ளது. இந்திய ஜவுளித் துறையில் பெண்களின் பங்களிப்பு 40 சதவீதம் ஆகும். ஆகவே, ஜவுளி உற்பத்தித் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். மேலும், சிறு, குறு நிறுவனங்களுக்கு 2019-20ஆம் ஆண்டில் வட்டி சலுகைக்காக ரூ.350 கோடியை ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது.
 - த. சித்தார்த்
 
 - எஸ். ராஜாராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com