இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.8,131 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் கூறியதாவது:
புதிய நிதியாண்டில் நிலையான மற்றும் வலுவான ஒரு தொடக்கத்தைப் பெற்றுள்ளோம். எங்களது வாடிக்கையாளர்கள் அவர்களின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களுக்காக தொடர்ந்து செலவிட்டு வருகின்றனர். இதனை எங்களுக்கு கிடைத்த வலுவான ஆர்டர்கள் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.38,172 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.34,261 கோடியுடன் ஒப்பிடுகையில் 11.4 சதவீதம் அதிகம்.
மொத்த வருவாயில் டிஜிட்டல் பிரிவிலான வருவாயின் பங்களிப்பு 32.2 சதவீத அளவுக்கு உள்ளது. 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டை காட்டிலும் இப்பிரிவிலான வருவாய் நடப்பு நிதியாண்டில் 42.1 சதவீத அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது.
நிகர லாபம் ரூ.7,340 கோடியிலிருந்து 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.8,131 கோடியை எட்டியுள்ளது.
முதல் காலாண்டில் நிகர அளவில் 12,356 பணியாளர்கள் நிறுவனத்தில் புதிதாக இணைந்துள்ளனர். இதையடுத்து, ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,36,641-ஆக உயர்ந்துள்ளது.
ஜூன் காலாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 ஈவுத் தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.