நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் ஒட்டுமொத்த அளவில் முதல் காலாண்டில் ரூ.3,802 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.21,803 கோடியாக இருந்தது. 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.19,128 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 13.9 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.3,612 கோடியிலிருந்து 5.2 சதவீதம் உயர்ந்து ரூ.3,802 கோடியாக இருந்தது என்று மும்பை பங்குச் சந்தையிடம் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
நிதி நிலை முடிவுகள் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சலீல் பரேக் கூறியதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வலுவான தொடக்கத்துக்கு, வாடிக்கையாளர்களுடனான உறவை பலப்படுத்த நாங்கள் செலுத்திய கவனம் மற்றும் முதலீடு ஆகியவையே முக்கிய காரணம். டிஜிட்டல் வருவாய் வளர்ச்சி 41.9 சதவீதமாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில் நிலையான கரன்ஸி அடிப்படையில் நிறுவனத்தின் வருவாய் முன்பு 7.5-9.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தற்போது 8.5-10 சதவீத அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.