ஆந்திர மாநிலம், சிம்ஹாத்ரியில் ரூ.100 கோடி மதிப்பில் சூரிய ஒளி மின்னாலை அமைக்க பெல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பாரத மிகு மின் நிறுவன (பெல்) திருச்சி பிரிவு தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய அனல் மின் நிறுவனத்தின் (என்டிபிசி) சார்பில், ஆந்திர மாநிலம் சிம்ஹாத்ரியில் உள்ள அனல் மின்நிறுவனத்தில் புதிதாக 25 மெகாவாட் திறனுடைய மிதக்கும் சூரிய ஒளி மின்னாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பொறியியல் மற்றும் உதவி சாதனங்கள் கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆணை பெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. என்டிபிசி நிறுவனத்திடம் இருந்து பெல் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்ற இரண்டாவது ஆணை இதுவாகும். ஏற்கெனவே தெலங்கானாவில் ராமகுண்டம் பகுதியில் 100 மெகாவாட் திறனில் சூரிய ஒளி மின்னாலை அமைக்கும் அனுமதியை பெல் நிறுவனம் பெற்றுள்ளது.
இதனையடுத்து மிதக்கும் சூரிய ஒளி மின்னாலை வணிகத்தில் பெல் நிறுவனம் 130 மெகாவாட் நிறுவு திறனுடைய நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் பெல் நிறுவனமானது நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது.
சூரிய ஒளி மின்செல்களையும், தொகுப்புகளையும் உற்பத்தி செய்யும் அதி நவீன திறனை மேம்படுத்தியுள்ளதன் மூலம் இத்துறையில் பெல் நிறுவனம் வலுப்பெற்று வருகிறது. சூரிய ஒளி மின்மாற்றிகளும், தொகுப்புகளும் தரமானவையாக இருப்பதாலேயே புதிய மின்னாலைகள் நிறுவும் ஆணைகளை பெல் நிறுவனம் தொடர்ந்து பெற்று வருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.