கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் கடந்த நிதி ஆண்டில் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த வங்கியின் மேலாண் இயக்குநரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான பி.ஆர்.சேஷாத்ரி தெரிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கியின் 100-ஆவது வருடாந்தரக் கூட்டம், கரூரில் உள்ள பதிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வங்கியின் தலைவர் என்.எஸ். ஸ்ரீநாத் தலைமை வகித்தார்.
கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டிற்கான வங்கியின் ஆண்டறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் லாப, நஷ்ட கணக்கு, இயக்குநர்களின் அறிக்கை, தணிக்கையாளரின் அறிக்கை ஆகியவற்றை முன்வைத்து வங்கியின் மேலாண் இயக்குநர் பி.ஆர்.சேஷாத்ரி பேசியது:
2018-19-ம் நிதியாண்டில் கடனீட்டு பத்திரங்களை வெளியிட்டதன் மூலமாக, பங்குதாரர்களின் உரிமைகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி வங்கி தனது முதலீட்டை ரூ.487 கோடிக்கு உயர்த்தியுள்ளது. இடர் அடிப்படையிலான முதலீட்டு வகிதம் (சிஆர்ஏஆர்) 16 சதவீதமாகவும், முதலடுக்கு பொதுப்பங்கு விகிதம் 14.28 சதவீதமாகவும் உள்ளது. இது ஆர்பிஐ நிர்ணயித்த விகிதத்தைவிட அதிகமாகவே உள்ளது.
வங்கியின் மொத்த வணிகம் முந்தைய ஆண்டைவிட 7% வளர்ச்சி கண்டு ரூ.1,10,484 கோடியை எட்டியுள்ளது. வங்கி அளித்துள்ள கடன்களின் வளர்ச்சி அளவு 10% அதிகரித்து ரூ.50,000 கோடி என்ற முக்கிய மைல்கல்லைக் கடந்து, ரூ.50,616 கோடியாகவுள்ளது. மார்ச் 31 தேதியளவில் அளிக்கப்பட்ட கடன்களுக்கும், பெறப்பட்ட வைப்புகளுக்குமான விகிதாசாரம் 84.55 சதவீதமாக உள்ளது.
சேமிப்பு வைப்புத்தொகையானது 10% வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் தேவை மற்றும் கால அடிப்படையிலான வைப்புகள் தலா 4% வளர்ச்சி பெற்றுள்ளது. மொத்த வைப்புகள் 5% உயர்ந்துள்ளது. தனிநபர்களுக்கு அளித்துள்ள பலவகையான கடன் 48% வளர்ச்சி பெற்றுள்ளது. வங்கியின் மொத்த வருமானம் 4% உயர்ந்துள்ளது என்றார்.