பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதல் காலாண்டில் ரூ.81 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ரூ.3,191.88 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.2,987.10 கோடியாக காணப்பட்டது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு நிகர அளவில் ரூ.1,119 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.81 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வாராக் கடன் பெருமளவு குறைந்ததையடுத்து வங்கி லாப பாதைக்கு திரும்பியுள்ளது.
அதன்படி, வங்கி வழங்கிய மொத்த கடனில் நிகர வாராக் கடன் விகிதம் 12.20 சதவீதத்திலிருந்து சரிந்து 5.98 சதவீதமாகியுள்ளது. மொத்த வாராக் கடன் அளவு ரூ.17,800.30 கோடியிலிருந்து குறைந்து ரூ.16,649.58 கோடியாகி உள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வாராக் கடன் இடர்பாட்டுக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.1,632.88 கோடியிலிருந்து சரிந்து ரூ.920.71 கோடியாகி உள்ளது என பங்குச் சந்தையிடம் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது.