நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 3.3 கோடியாக குறைந்துள்ளது.
இதுகுறித்து கேனலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 3.31 கோடியாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் இதே கால அளவில் விற்பனை 0.5 சதவீதம் குறைந்து 3.30 கோடியாகி உள்ளது. ஜூன் காலாண்டில் சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் 1.03 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து 31 சதவீத சந்தைப் பங்களிப்புடன் கடந்த எட்டு காலாண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் 73 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று 22 சதவீத சந்தைப் பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், விவோ 53 லட்சம் போன்களை விற்பனை செய்து 18 சதவீத சந்தைப் பங்களிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்நிறுவனங்களைத் தொடர்ந்து ஓப்போ 9 சதவீத பங்களிப்பையும் (30 லட்சம்), ரியல்மி 8 சதவீத பங்களிப்பையும் (27 லட்சம்) கொண்டுள்ளன.
ரூ.10,000-க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களுக்கு தேவை குறைந்துள்ள நிலையில், விற்பனையாளர்களின் கவனம் ரூ.10,000 முதல் ரூ.20,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை நோக்கி திரும்பியுள்ளதாக கேனலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.