தனியார் துறையைச் சேர்ந்த ஆக்ஸிஸ் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் முதல் காலாண்டில் 95 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட மொத்த வருவாய் ரூ.15,702.01 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.19,123.71 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.701.09 கோடியிலிருந்து 95.4 சதவீதம் அதிகரித்து ரூ.1,370.08 கோடியைத் தொட்டது.
வாராக் கடன்களை எதிர்கொள்ள ஒதுக்கப்படும் இடர்பாட்டுத் தொகை ரூ.3,337.70 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,814.58 கோடியாக இருந்தது. இருப்பினும், முதல் காலாண்டில் வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 6.52 சதவீதத்திலிருந்து குறைந்து 5.25 சதவீதமானது. அதேபோன்று,
நிகர வாராக் கடன் விகிதமும் 3.09 சதவீதத்திலிருந்து சரிந்து 2.04 சதவீதமாக இருந்தது என செபிக்கு அளித்த அறிக்கையில் ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.