விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் கடும் இழப்பை சந்தித்துள்ள பிரிட்டனில் உள்ள டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜேஎல்ஆர் சீனாவிலிருந்து நிதி பங்குதாரரை தேடுவதாக அதன் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற டாடா மோட்டார்ஸின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பங்குதாரர்களிடம் இதுகுறித்து மேலும் பேசியதாவது:
பிரெக்ஸிட் விவகாரத்தில் காணப்படும் இழுபறி நிலை ஜேஎல்ஆர் நிறுவனத்தை அதன் சொந்த மண்ணில் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. தற்போதைய நெருக்கடியை கையாள்வதற்கான ஒரே வழி பங்குதாரர் மூலமாக கூடுதல் முதலீடு மேற்கொண்டு மூலதனத்தை தொடர்ந்து பெருக்குவது அவசிய தேவையாக உள்ளது. குழுமத்தின் நிதி சுமையை குறைக்க சீனாவிலிருந்து பங்குதாரர்களை டாடா மோட்டார்ஸ் எதிர்நோக்கியுள்ளது.
சீனாவில் ஜேஎல்ஆரின் விற்பனை 50 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இருப்பினும், கடந்த 12 மாதங்களில் முதல் முறையாக ஜூலையில் விற்பனையில் முன்னேற்றமான நிலை தென்படுகிறது. நீண்டகால அடிப்படையில் சந்தையின் போக்கு எப்படி உள்ளது என்பதை நாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும் என்றார் அவர்.