வரும் மாதங்களில் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு 50,000 டன் வெங்காயத்தை இருப்பு வைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய உணவு அமைச்சக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
ஆசியாவின் மிகப்பெரிய மொத்தவிலை சந்தையான மகாராஷ்டிராவின் லசல்கோனில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.11-ஆக உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.8.50-ஆக மட்டுமே காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது வெங்காயத்தின் விலை 29 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதேசமயம், தேசிய தலைநகர் தில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரகத்துக்கேற்ப ரூ.20-ரூ.25 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் பயிரிடப்படும் மாநிலங்களில் காணப்படும் வறட்சியால் ரபி பருவத்தில் அதன் விளைச்சல் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவுக்கே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வரும் மாதங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை அதிரடியாக உயர வாய்ப்புள்ளது.
அதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 50,000 டன் வெங்காயத்தை இருப்பு வைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் மூலம் சப்ளை அதிகரிக்கப்பட்டு விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.