இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
அமெரிக்க மற்றும் சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் நிச்சயமற்றதன்மை நிலவி வருவது சர்வதேச நாடுகளின் பங்குச் சந்தையில் மந்த நிலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிரடியாக உயர்ந்தது மற்றும் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு ஆகியவை பங்கு முதலீட்டாளர்களிடையே எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கின. அதன் காரணமாக, பங்கு வர்த்தகம் விறுவிறுப்பின்றியே காணப்பட்டது.
யெஸ் வங்கி தரக்குறியீட்டை மூடிஸ் நிறுவனம் குறைக்க வாய்ப்புள்ளதாக எழுந்த தகவலையடுத்து அந்த வங்கி பங்கின் விலை 12.96 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பு காணப்பட்டதையடுத்து, பவர் கிரிட், மஹிந்திரா & மஹிந்திரா, கோட்டக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பங்குகளின் விலை 1.54 சதவீதம் வரை அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் சரிந்து 39,741 புள்ளிகளாக நிலைபெற்றது.
அதேசமயம், தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 7 புள்ளிகள் உயர்ந்து 11,914 புள்ளிகளாக நிலைத்தது.